பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, NQBSA விருதுகள் நிகழ்வில் Best Digital Process Enabler என்ற விருதை வென்று, வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மத்தியில் வெற்றிவாகை சூடியுள்ளது


People’s Leasing & Finance PLC (PLC), இலங்கையின் வங்கிச்சேவை அல்லாத நிதியியல் சேவைகள் துறையில் சந்தை முன்னோடியாகத் திகழ்வது மட்டுமன்றி, இத்துறையில் டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்திலும் முன்னிலை வகிக்கின்றது. அதன் நன்மதிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், PLC இன் டிஜிட்டல் செயல்முறைகளுக்கான இடமளிப்பு மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க முயற்சிகளுக்கு, நாட்டில் மென்பொருள்/டிஜிட்டல் சேவைகளின் சாதனைகளின் மிகவும் நன்மதிப்புடைய தளமாக அறியப்படுகின்ற இலங்கை பிரிட்டிஷ் கொம்பியூட்டர் சங்கத்தால் (British Computer Society -BCS) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற தேசிய சிறப்புத் தர மென்பொருள் விருதுகள் (National Best Quality Software Awards – NBQSA) நிகழ்வில் பெருமதிப்பிற்குரிய விருதுகள் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.        

இதன் பிரகாரம், ஆண்டின் Best Digital Process Enabler க்கான விசேட விருதை வென்றுள்ளது. மேலும், அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைகளையும் தங்குதடையின்றி ஒருங்கிணைந்த டிஜிட்டல் தொடுபுள்ளியினூடாக வழங்குகின்ற PLC இன் ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த தீர்வான “PLC TOUCH” க்கான அங்கீகாரமாக, நிறுவனத்தின் உள்வாரி மேம்பாட்டிற்கான சிறப்பு விருதொன்றையும் அது வென்றுள்ளது. அண்மையில் இடம்பெற்ற NQBSA விருதுகள் நிகழ்வில் PLC க்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டதுடன், நிறுவனத்தின் சார்பில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கான பிரதிப் பொது முகாமையாளர் திரு. பிரபாத் குணசேன அவர்கள் இவ்விருதுகளைப் பெற்றுக்கொண்டார். வங்கிச்சேவை அல்லாத நிதியியல் சேவைகள் துறையில், ஏனைய பாரிய வங்கிகள் மற்றும் சக நிறுவனங்களைப் பின்தள்ளி, NQBSA இல் இத்தகைய அங்கீகாரத்தை வென்றுள்ள ஒரேயொரு வங்கிச்சேவை அல்லாத நிதியியல் நிறுவனம் PLC மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.      

PLC இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. ஷமிந்ர மர்சலீன் அவர்கள் இந்த சாதனை முக்கியத்துவம் குறித்து கருத்து வெளியிடுகையில், “டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்திற்கான எமது பயணம் 2021 இல் ஆரம்பிக்கப்பட்டு, எமது வாடிக்கையாளர்கள் மீதான எமது ஓயாத அர்ப்பணிப்பின் உந்துசக்தியால் அது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மிகவும் விரைவாக மாற்றங்கண்டு வருகின்ற டிஜிட்டல் பரப்பில் நுகர்வோரின் நடத்தைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் தேவைகளை நாம் இனங்கண்டுள்ளோம். செயல்முறைகளை நெறிப்படுத்தல் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு டிஜிட்டல் மூலமாக ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சி வாய்ப்புக்களை நாம் விளங்கிக் கொண்டு, பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கம், தகவமைப்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகளின் அமுலாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் தொழிற்துறையில் தொடர்ந்தும் முன்னிலை வகித்தோம். மிகவும் மதிப்புமிக்க இவ்விருதுகளைப் பெற்றுள்ளமை, குறிப்பாக Best Digital Process Enabler என்ற விருது, புத்தாக்கத்தில் எமது ஆற்றல் மற்றும் தங்குதடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் எமது அர்ப்பணிப்பு ஆகியவற்றை நிரூபிக்கின்றது. எமது வாடிக்கையாளர்கள் மீது நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இச்சந்தர்ப்பத்தில் நாம் மீளவும் வலியுறுத்த விரும்புவதுடன், எதிர்காலத்தில் இன்னும் பல முதன்முதலான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.  

NQBSA விருதுகள் மிகவும் போட்டித்தன்மை கொண்டவையாக உள்ளதுடன், மதிப்பிற்குரிய துறைசார் வல்லுனர்கள் அடங்கிய சுயாதீன நடுவர் குழுவினால் இதற்கான விண்ணப்பங்கள் மிகக் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு, மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் Best Digital Process Enabler என்ற விருது, ஒரு விசேட பகிரங்க விருதாக, இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து விண்ணப்பதாரிகளும் தாமாகவே இந்த விருதுக்காக போட்டியிடும் தகைமை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டமையால், மிகவும் மதிப்புடையதாக மாறியதுடன், கடும் போட்டியும் நிலவியது. தொழில்நுட்பங்களின் தனித்துவம், புத்தாக்கம் மற்றும் முன்மாதிரி போக்கு, UI/UX வடிவமைப்பு, வெளிப்படைத்தன்மை, வாழ்க்கைத்தரத்தில் செலுத்தும் தாக்கம், பயனர் சௌகரியம் மற்றும் செயல்முறை தன்னியக்கமயமாக்கம் உட்பட செயல்பாடுகள் மற்றும் சிறப்பம்சங்கள், செயல்பாட்டு திறன் உட்பட வணிகத்தின் மீதான தாக்கம் மற்றும் புதிய வணிக வாய்ப்புக்களைத் தோற்றுவித்தல் அடங்கலாக நிறுவனத்திற்கான பலன் மற்றும் அதன் மூலமாக சமூகத்திற்கான விளைவு போன்ற பல்வேறுபட்ட அம்சங்களின் அடிப்படையில் இவ்விருதுக்கான முடிவு தீர்மானிக்கப்பட்டது. 

Best Digital Process Enabler என்ற விருதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய PLC இன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கான பிரதிப் பொது முகாமையாளரான பிரபாத் குணசேன அவர்கள், “Best Digital Process Enabler என்ற விருது, பகிரங்க பிரிவின் கீழ் வழங்கப்பட்டதுடன், வங்கிச்சேவையல்லாத நிதியியல் நிறுவனங்கள் துறையில் எமது சக நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமல்லாது, பாரிய வங்கிகள் மற்றும் நிதியுடன் தொடர்புபட்ட மற்றும் தொடர்புபடாத ஏனைய துறைகளைச் சார்ந்த பாரிய நிறுவனங்களுக்கு எதிராகவும் நாம் போட்டியிட வேண்டி ஏற்பட்டது. புத்தாக்கம் மற்றும் தங்குதடையின்றிய சேவை வழங்கல் மீது நாம் கொண்டுள்ள தணியாத தாகத்துடன், நிறுவனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் டிஜிட்டலுக்கு இடமளிப்பதில் எமது அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், பொறுப்புணர்வுமிக்க ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில், டிஜிட்டல்மயமாக்கலை நோக்கிய தேசத்தின் முயற்சிகளுக்குப் பங்களிப்பாற்றுவதையிட்டும், எமது சூழல், சமூக மற்றும் நிர்வாக ஆட்சி சார்ந்த இலக்குகளை அடைவதை நோக்கியும், காகித பாவனை மற்றும் எரிசக்தி நுகர்வைக் குறைப்பதனூடாக, ஐக்கிய நாடுகள் நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய தேசத்தின் முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்டுவதையிட்டும் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

PLC நிறுவனத்தின் டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் சேவை வழங்கலுக்காக அது அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது இது முதற்தடவையல்ல. 2017 ஆம் ஆண்டில் அதன் Selfecash தீர்வுக்காக, பங்களாதேஷில் APICTA 2017  நிகழ்வில் நிதியியல் தொழிற்துறை பிரிவில் தங்க விருதை PLC வென்றிருந்தது. அதே ஆண்டில் NBQSA விருது நிகழ்வில் Inhouse பிரிவில் Selfecash க்காக தங்க விருதை வென்றதுடன், அதன் ‘Margin Trading System’ க்காக Financial Application பிரிவில் சிறப்பு விருதையும் வென்றது. 2016 ஆம் ஆண்டில் NBQSA விருது நிகழ்வில் Inhouse பிரிவில் People’s General Insurance System (PGIns) க்காக வெண்கல விருதை வென்றது. டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய அதன் உறுதியான பயணத்தில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் இடமளிப்பு ஆகியவற்றில் PLC இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இச்சாதனைகள் வெளிக்காண்பிக்கின்றன.      

பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி ஆனது இலங்கையில் அனுமதி உரிமம் பெற்ற, வங்கிச்சேவை அல்லாத ஒரு நிதியியல் நிறுவனமாக செயல்பட்டு வருவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப நிதியியல் தீர்வுகளை பிரத்தியேகமாக வழங்குவதில் காண்பிக்கும் புத்தாக்கம் மற்றும் ஓயாத அர்ப்பணிப்பிற்காக பெயர்பெற்றுள்ளது. மிகவும் வலுவான அத்திவாரத்துடனும், பரந்துபட்ட உற்பத்தி வரிசையுடனும், மேன்மை மீதான அர்ப்பணிப்புடனும், நிதியியல் சேவைகள் துறையில் முன்னிலை வகிக்கின்ற ஒரு நிறுவனமாக PLC தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. மக்கள் வங்கியின் ஒரு துணை நிறுவனமாக, இலங்கையிலுள்ள மக்களுக்கு வளர்ச்சி மற்றும் சுபீட்சத்திற்கு வழிகோலி, நிதியியல் சேவைகளை வழங்குவதில் நம்பிக்கை மிக்க மற்றும் நன்மதிப்புடைய நிறுவனமாக தனது ஸ்தானத்தைத் தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது.

திரு. இசுரு சிறினிமால், உப தலைவர், தொழில்நுட்பம், Epic Lanka; திரு. கீதப்பிரிய திலகரட்ண, தலைமை நடுவர், NBQSA 2023; திரு. அலான்ஸோ டோல், தலைவர், BCS Sri Lanka; திரு. சஞ்சய அமரசேகர (PLC); திரு. சண்ண டி சில்வா, பிரதம நிறைவேற்று அதிகாரி, LankaPay; திரு. பிரபாத் குணசேன, பிரதிப் பொது முகாமையாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், (PLC); திரு. நிரஞ்சன் செல்வநாயகம், (PLC); கயனி ஹெட்டியாராச்சி, (PLC); திரு. அசங்க வீரசேன, (PLC) மற்றும் திரு. சமித் பெரேரா, (PLC).